
சீரற்ற மாதவிடாய் பிரச்னைகளைப் போக்கும் 13 வீட்டு வைத்தியம்
பலருக்கும் சீரற்ற மாதவிடாய் பிரச்னை இருக்கிறது. மாதவிலக்கு வருவதே இல்லை என்று ஒரு குழுவினர் சொல்கின்றனர். அடிக்கடி மாதவிடாய் வருகிறது என்றும் ஒரு குழுவினர் சொல்கின்றனர். சிலரோ மாதவிடாய் சமயத்தில் தாங்க முடியாத வலி என்கின்றனர். இப்படியான மாதவிடாய் தொந்தரவுகளுக்கு வீட்டிலே உள்ள பொருட்களை வைத்தே தீர்வு காண்போம்.
சீரற்ற மாதவிடாய் பிரச்னைகளுக்கான வீட்டு வைத்தியம்
1. செங்காயான பப்பாளி
மாதவிலக்கு சமயத்தை தவிர்த்து மற்ற நாட்களில் செங்காயான பப்பாளி ஜூஸ் தினமும் ஒரு டம்ளர் அளவு குடிக்கவும்.
செங்காயாக கிடைக்கவில்லை எனில் பழுத்த பப்பாளி பழத்தின் ஜூஸையும் குடிக்கலாம்.
கர்ப்பப்பையை சுத்தம் செய்யும். பிரச்னையை சரியாக்கும்.
2. மஞ்சள் பால்
நாம் பாரம்பர்யமாக குடித்து வந்த மஞ்சள் பால் வைத்தியம் ஒரு நல்ல தீர்வு.
இளஞ்சூடான பாலில் சிறிது மஞ்சள் தூள், கருப்பட்டி கலந்து 2 மாதங்கள் தொடர்ந்து இரவில் குடித்து வந்தால் சீரற்ற மாதவிலக்கு பிரச்னை சரியாகும்.
3. கற்றாழை
கற்றாழையைத் தோல் நீக்கி, சதைப் பகுதியை எடுத்து நன்கு அலசி கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட 100% மாதவிலக்கு பிரச்னைகள் தீரும்.
காரணம் தெரியாத மாதவிலக்கு பிரச்னைகளும் சரியாகும்.
4. இஞ்சி
ஒரு இன்ச் இஞ்சியை துருவிக் கொள்ளவும்.
ஒரு டம்ளர் நீரில் போட்டு 3-4 நிமிடம் கொதிக்க வைக்கவும்.
சிறிது இந்துப்பு அல்லது நாட்டு சர்க்கரை போட்டு குடிக்கலாம். 8-10 வாரங்களிலே சீரற்ற மாதவிடாய் சரியாகும்.
5. சீரகம்
2 டீஸ்பூன் சீரகத்தை 2 கிளாஸ் வெந்நீரில் போட்டு இரவில் ஊற விடவும்.
மறுநாள் காலை அதை அப்படியே வெறும் வயிற்றில் சீரகத்துடன் நீரையும் குடிக்கவும். மாதவிடாய் சீராகும்.
6. வெந்தயம்
ஒரு டம்ளர் நீரில் 2 டீஸ்பூன் வெந்தயம் போட்டு ஊற வையுங்கள்.
மறுநாள் காலை, வெந்தயத்துடன் சேர்த்து நீரையும் குடிக்க வேண்டும். மாதவிடாய் பிரச்னை சரியாகும்.
7. பட்டைத் தூள்
இளஞ்சூடான பாலில், ½ டீஸ்பூன் பட்டைத்தூள், தேவையான கருப்பட்டி சேர்த்து பருகிட சீரற்ற மாதவிடாய் சீராகும்.
2 மாதம் தொடர்ந்து குடித்து வர வேண்டும்.
8. யோகா ஆசனங்கள்
வஜ்ராசனம், மகராசனம், பந்தாகோணாசனம், புஜங்காசனம், தனுராசனம், பச்சிமோத்தாசனம், சூர்ய நமஸ்காரம் ஆகியவற்றை யோகா நிபுணர்களிடம் முறையாக கற்ற பிறகு செய்து வந்தால் சீரற்ற மாதவிடாய் சரியாகும்.
9. அன்னாசி
1 கப் (80 கிராம்) அளவுக்கு அன்னாசி பழத்துண்டுகளைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் பிரச்னைகள் சரியாகும். பிரொம்லைன் எனும் சத்துகள் இருப்பதால் கர்ப்பப்பையில் உள்ள பிரச்னையை நீக்கும்.
10. திராட்சை
திராட்சை ஜூஸ் வாரம் 3 முறை, திராட்சை பழங்களைத் தினமும் சாப்பிடுவது, உலர்திராட்சையை தினமும் சாப்பிடுவது.
இப்படி திராட்சையை எந்த முறையிலாவது தொடர்ந்து சாப்பிட்டு வர மாதவிடாய் சிக்கல்கள் தீரும்.
11. கொத்தமல்லி ஜூஸ்
கொத்தமல்லியை நன்கு கழுவி சுத்தம் செய்யவும்.
கொத்தமல்லி தழைகளை அரைத்து ஜூஸாக்கி ஒரு டம்ளர் அளவுக்கு குடிக்க மாதவிடாய் தொல்லைகள் தீரும். சிறிது இந்துப்பு சேர்க்கலாம்.
தனியா விதைகளை பொடியாக்கி வைத்து, அதனுடன் சோம்பு பொடி கலந்து, புதினா இலைகளைப் போட்டு, கருப்பட்டி சேர்த்து டீயாகவும் குடிக்கலாம்.
இதையும் படிக்க: 3 மாதத்தில் பிசிஓடியை விரட்டும் சிம்பிள் வீட்டு வைத்தியம்
12. அசோக பட்டை
அசோகப்பட்டையை பொடியாக்கி வைத்துக் கொள்ளவும்.
காலையில் வெந்நீரில், ஒரு டீஸ்பூன் அளவு அசோகப்பட்டை பொடி கலந்து குடித்து வரலாம்.
இரண்டு மாதங்கள் குடிக்க பலன் தெரியும்.
13. கலச்சிக்காய்
கலச்சிக்காய் பொடியுடன் சிறிது மிளகுத் தூள், தேன் சேர்த்து காலை, மாலை 48 நாட்கள் குடித்து வர மாதவிடாய் தொல்லைகள் அனைத்தும் குணமாகும்.
எந்தவித மருந்துகளோ அறுவை சிகிச்சையோ தேவைப்படாது.
மாதவிடாய் தொடர்பான பிரச்னைகளைப் போக்கும் ரெசிபி
உளுந்து சாதமும் எள்ளு துவையலும்…
தேவையானவை
அரிசி – 1 கப்
பூண்டு – 2 பல்
தொலி உளுந்து – ¼ கப்
தேங்காய் – ¼ கப்
கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய், பெருங்காயம் – தாளிக்க
உப்பு, எண்ணெய் – சிறிதளவு
செய்முறை
அரிசியையும் தொலி உளுந்தையும் லேசாக வறுத்துக் கொள்ளவும்.
குக்கரில் எண்ணெய் விட்டு தாளிக்க வேண்டியதைத் தாளிக்கவும்.
பூண்டை சேர்த்து வதக்கவும்.
அரிசி, உளுந்து போட்டு, ஒரு கப் அரிசிக்கு 3 கப் தண்ணீர் விடவும்.
உப்பு போட்டு மூடி, 3-4 விசில் வரை வேகவிட வேண்டும்.
இந்த சாதத்துக்கு எள்ளு துவையல் செய்து சாப்பிடலாம்.
எள்ளு துவையல் செய்வது எப்படி?
எள்ளு ½ கப், தேங்காய் ½ கப், உப்பு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை வறுத்த பின் சிறிது புளி சேர்த்து அரைக்க வேண்டும்.
No comments:
Post a Comment